வாஷிங்டன்: அமெரிக்க அரசின் வரி மற்றும் செலவுக்கான புதிய மசோதாவை ஒட்டி, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் இடையே கடும் மோதல் உருவாகியது. சமூக ஊடகங்கள் வழியாக இவர்கள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி பரஸ்பர விமர்சனங்களில் ஈடுபட்டனர்.
‘பிக் பியூட்டிஃபுல் பில்’ எனப்படும் டிரம்ப் அரசு கொண்டு வந்த வரிக்குறைப்பு மசோதாவை மஸ்க் கடுமையாக விமர்சித்தார். இதனால் அவரது நிறுவனமான டெஸ்லாவிற்கு வழங்கப்பட்ட அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாக டிரம்ப் தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்பான சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருப்பதாகவும், அதனால்தான் அதற்கான விசாரணை விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் மஸ்க் குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து டிரம்ப், “எலான் மஸ்க் சுயநினைவை இழந்துள்ளார், அவருடன் பேச முடியாது” என கடுமையாக பதிலளித்தார். இந்த பரஸ்பர மோதல் உலகளவில் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், எலான் மஸ்க் தன்னுடைய சமீபத்திய ‘எக்ஸ்’ (முன்னாள் ட்விட்டர்) பதிவில், “கடந்த வாரம் டிரம்ப் குறித்து நான் செய்த சில பதிவுகள் அளவுக்கு மீறியதாக இருந்தன. அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மஸ்க் வெளியிட்ட மன்னிப்பை, டிரம்ப் “அவர் மன்னிப்பு கேட்டது மிகவும் நல்ல விஷயம்” என ஏற்றுக் கொண்டார். இதனால் இந்த அரசியல் தொழில்துறையினருக்கிடையிலான மோதல் சமாதானமாக முடிவடைந்துள்ளது.
நன்றி