ஜெருசலேம் – சுற்றுச்சுழல் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கும் ஸ்வீடன் வீராங்கனை கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 12 சர்வதேச ஆர்வலர்கள், காசா பகுதியில் நிவாரண உதவிகளை கொண்டு செல்ல முயன்றபோது இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும், கண்டனங்களையும் உருவாக்கியுள்ளது.
நிவாரணப் பயணத்தின் பின்னணி:
கடந்த மார்ச் மாதம் தொடக்கம், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால், காசா பாலயத்தில் உணவு, மருந்து உள்ளிட்ட முக்கிய தேவைகள் தடைபட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக குழந்தைகள், இந்த நெருக்கடியால் கடும் துன்புறுகின்றனர்.
மதிப்பிட முடியாத மனிதாபிமான செயல்:
இந்த சூழலில், ‘ப்ரீடம் புளோடிலா’ (Freedom Flotilla) எனப்படும் கூட்டமைப்பின் கீழ், மேட்லீன் எனும் படகில், கிரேட்டா துன்பர்க் தலைமையிலான குழு, சிசிலி, இத்தாலியிலிருந்து ஜூன் 1 ஆம் தேதி புறப்பட்டு காசாவை நோக்கி நிவாரணப் பொருட்களுடன் பயணம் செய்தனர். அவர்கள் காசா கரையிலிருந்து 200 கிமீ தொலைவில் சர்வதேச கடற்பரப்பில் பயணித்தபோது, இஸ்ரேல் கடற்படை படகை முற்றுகையிட்டு, அனைவரையும் கைதுசெய்து இஸ்ரேலுக்குக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
சர்வதேச கண்டனங்கள்:
ப்ரீடம் புளோடிலா கூட்டமைப்பு, “இது ஒரு சட்டவிரோத கடத்தல். மனிதாபிமான செயலை தடுக்க இஸ்ரேல் ராணுவம் காட்டும் பாசிச போக்கு” எனக் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தச் செயல், சர்வதேச கடல் சட்டங்களுக்கும், மனித உரிமைகளுக்கும் எதிரானது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்த பரபரப்பு:
இந்த விவகாரம் உலகம் முழுவதும் தீவிர கவனத்தை பெற்றுள்ளது. மனித உரிமை அமைப்புகள், சுற்றுச்சுழல் ஆர்வலர்கள், மற்றும் பல அரசியல் தலைவர்கள், இஸ்ரேலின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளனர். கிரேட்டா துன்பர்க் உள்ளிட்டோர் பாதுகாப்பாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்த சம்பவம், காசா மக்களுக்கு உதவ விரும்பும் சர்வதேச சமூகத்தின் முயற்சிகள் எவ்வளவு சவாலானதாக இருக்கின்றன என்பதையும், இஸ்ரேல்-பாலஸ்தீன்இடையேயான நெருக்கடிக்கு உரிய தீர்வு தேவை என்பதையும் வலியுறுத்துகிறது.
நன்றி