மன்னாரில் மாவட்டத்தில் நடைபெறும் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது அமைப்புகள் இணைந்து இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தன.
இந்த போராட்டம் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையிலானோர் முன்னிலை வகித்தனர்.
இப்போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
போராட்டக் கூட்டம் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மன்னார் பிரதான வீதி வழியாக நகர்ந்து மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது. பின்னர், மன்னார் மாவட்டச் செயலகம் முன்பாக ஒன்று கூடிய மக்கள், பதாகைகள் ஏந்தி, கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த பேரணியின் மூலம், மக்கள் மனத்தில் உள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வாழ்வாதார அச்சங்கள் ஆகியவை வெளிப்படையாகக் கூறப்பட்டன.
இத்தகைய செயற்பாடுகள், மன்னார் மக்களின் உரிமைகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான முக்கிய சிந்தனையை ஒளிவிடுகின்றன.
நன்றி