தெஹ்ரான்/தோஹா:
அமெரிக்கா ஈரானின் 3 முக்கிய அணுசக்தி உலைகளை தாக்கியதற்குப் பதிலடியாக, ஈரான் கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை வீசியதாக அறிவித்துள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வான்வெளி மூடல் மற்றும் பதற்ற நிலை:
ஈரான் தாக்குதலுக்கு முந்தைய நிலையில், அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் பழிவாங்கும் வாய்ப்பு உள்ளது என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கத்தார் தனது வான்வெளியைத் தற்காலிகமாக மூடியது. தாக்குதலுக்குப் பின்னர், பஹ்ரைன் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தங்கள் வான்வெளியை மூடத் தொடங்கியுள்ளன.
அல் உதெய்த் தளத் தாக்குதல்:
கத்தாரில் உள்ள அல் உதெய்த் என்ற முக்கிய அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகளை தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. இதனை கத்தார் கடுமையாக கண்டித்து, இது கத்தாரின் இறையாண்மைக்கும், வான்வெளிக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது என வெளிப்படையாகக் கூறியுள்ளது.
கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் பதில்:
“இந்த தாக்குதலுக்கு நேரடியாக பதிலளிக்கும் உரிமை கத்தார் அரசுக்கு உள்ளது,” என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி தெரிவித்தார். இது ஒரு அப்பட்டமான ஆக்கிரமிப்பு எனவும், எந்த நாட்டும் தன் எல்லைகளில் இவ்வாறு தாக்கப்படும் பட்சத்தில் எதிர்வினை காட்டும் உரிமை பெற்றது எனவும் அவர் கூறினார்.

ஏவுகணைகளை தடுத்த கத்தார்:
கத்தார் பாதுகாப்பு அமைச்சகம், தாக்குதலின் போது ஏவப்பட்ட ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் வெற்றிகரமாக தடுக்கப்பட்டதாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் தரப்பில் கூறப்படும் விளக்கம்:
அமெரிக்காவின் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதலை அடுத்தே, பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்கள் குறிவைக்கப்பட்டன. இது நகர்ப்புற பகுதிகளுக்கு வெளியே நடந்ததால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படவில்லை என்றும், அமெரிக்க குண்டுவீச்சு எண்ணிக்கைக்கு சமமான அளவிலான தாக்குதல்களே நாம் நிகழ்த்தியுள்ளோம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பதில் எதிர்பார்ப்பு:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், ஈரானின் இந்த பதிலடி தாக்குதலை முன்கூட்டியே தெரிந்திருந்ததாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது, அமெரிக்கா எவ்வாறு பதிலளிக்கும் என்பதை உலக நாடுகள் கவனித்து வருகின்றன.
தற்போதைய நிலை:
கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. பரபரப்பான சூழலில் மேலும் தாக்குதல்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ள நிலையில், இது ஒரு பிராந்திய போர் நிலைக்கு மாறுமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.
நன்றி